Thursday, February 26, 2009

எனது முதல் கடல் பயணம்.......

நெடு நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த இந்தப்பயணம் கனவுப்பயணமாக இருக்கும் என்றெண்ணியிருந்தேன். ஆனால் மிகவும் கலக்கம் வாய்ந்த பயணமாகவே அமைந்தது. முதல் கனவு? நினைவில் இல்லை. முதல் முத்தம்? அது தான் எனது முதல் கனவாக இருக்கலாம். முதல் காதல்? இந்தக்கேள்வியை விட, எனது முதல் காதலியின் முதல் குழந்தைக்கு என்ன வயது ஆகிறது என்ற கேள்வியே மிகவும் பொருத்தமானது. இப்படியாக எந்த முதல்களையும் நான் பதிவு செய்தது இல்லை. அதனாலேயே எனது முதல் கடல் பயணத்தைப்பதிவு செய்கிறேன்.

பாயின்ட் நுவோ (Point noire), இது காங்கோ நாட்டின் துறைமுக நகரம். இங்கிருந்து காபோன் என்ற அருகாமை நாட்டிற்கு module installation (தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) பணிக்காகச்செல்வதே குறிக்கோள். இங்கே நான் பணியாற்றும் பார்ஜை (Barge) பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம். பார்ஜ் என்பது ஆழ் கடல் குழாய் அமைக்கும் பணிக்காகப்பயன்படுத்தப்படும் ஒரு மிதக்கும் கனரக தொழிற்கூடம். இது பார்ப்பதற்கு கப்பல் போல் காட்சி அளித்தாலும் இதனைக்கப்பல் என்று கூறிவிட இயலாது. பொதுவாக பார்ஜிற்க்கு முன்தள்ளி அமைப்பு (propulsion unit) இருப்பதில்லை. ஒரு இழுவைப்படகின் (tucking boat) துணையுடனேயே இதனை இயக்க முடியும். நான் பணியாற்றும் இந்த பார்ஜ் சுமார் 450 அடி நீளமும் 110 அடி அகலமும் கொண்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

மாலை சுமார் 0530 மணி, பார்ஜ் நகரத்துவங்கிவிட்டது என்று நண்பர்கள் கூறியே அறிந்து கொண்டேன். பார்ஜினுடைய வேகம் 5 knot (1 knot என்பது மணிக்கு/கி.மீ 1.8) வேகத்திற்கும் குறைவாகவே இருந்தது. இவ்வளவு குறைவான வேகத்திலும் பார்ஜ் ஒரு ஊஞ்சலைப்போல ஆடிக்கொண்டேதான் இருந்தது. நான் மற்றும் நண்பர் பவுல், இருவரும் பார்ஜினுடைய தளத்திற்கு (deck) சென்று சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முற்பட்டபோது பாயின்ட் நுவோ துறைமுகம் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த கப்பல்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறையத்தொடங்கியது ஒரு புதுமையான வியப்பைக்கொடுத்தது.

பவுல் கடந்த ஐந்து வருடகாலமாக இந்த துறையில் பணியாற்றி வருகிறார். திருச்சூரைச்சார்ந்த அவர் நெய்வேலியில் படித்து வளர்ந்தவர். நன்றாகத்தமிழ் பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் சிறிது ஆக்ரோஷமாகவே காணப்பட்டது, ஆகையினால் பார்ஜினுடைய ஆட்டமும் அதிகமாக இருந்தது; சிறுது நேரம் பார்ஜினுடைய தளத்தில் கதைத்து கொண்டு, அலுவலக அறைக்கு சென்றுவிட்டோம். அலுவலக அறையில் மற்ற சில நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள். பார்ஜினுடைய ஆட்டத்தின் காரணமாக எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டு, அமைதியாக அமர்ந்திருந்தேன். மற்றவர்களுக்கும் அதே நிலை தான் என்றாலும், அதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்கள்.

எங்களது நிறுவனம் குழாய் அமைப்பது செவ்றோன் என்ற அமெரிக்க எண்னை நிறுவனத்திற்கு. ஆகையினால் குழாய் அமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்கு அந்நிறுவனத்தின் சார்பாக ஒரு 68 வயது ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். அவரது அறை எங்களது அறைக்கு அடுத்துள்ளது.

எல்லோரும் அமைதியாக இருந்த சூழ்நிலையில். அந்த அறையிலிருந்து ஒரு கூக்குரல். 'ஃப' வில் தொடங்கி 'க்' கில் முடியும் ஒரு பொதுவான ஆங்கிலச்சொல்லில் ஓலமிட்டுக்கொண்டிருந்தார். எங்களது அறைக்கு வந்து அவருடைய விவாகரத்தான தன் இரண்டாவது மனைவியின் ஒழுக்கத்தைப்பற்றி நாகரிகமான முறையில் நயமான நான்கு ஆங்கிலச்சொற்களை பயன்படுத்தி அவளுடைய பிறப்பை கேவலப்படுத்துவது அவருடைய வழக்கம் .

இம்முறை அவர் எங்களது அறைக்கு வந்தது தான் தாமதம், எல்லோரும் பார்ஜினுடைய ஆட்டத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட அங்கலாய்ப்பை அரங்கேற்றம் செய்து கொண்டிருந்தார்கள். நான் மட்டும் இந்த ஆட்டத்தின் நாயகனாக பேசக்கூட திராணியற்று சப்தநாடியும் அடங்கி அமைதியாக வீற்றிருந்தேன். எனது சிந்தனை ஒரு ஆறு ஆண்டுகள் பின்னோக்கி போயிற்று. நான் மற்றும் நண்பர் கிருஷ்ணன், இருவரும் பொறியியல் இளநிலை முடித்த கையோடு கப்பலில் வேலைக்குச்சேரவேண்டும் என்ற எண்ணத்தில் மும்பைக்கு பயணமானோம். ஒரு சரக்கு கப்பல் நிறுவனத்தின் பொது உரையாடல் மற்றும் நேர்காணலுக்காகச்சென்றிருந்தோம். அங்கே பொது உரையாடலின்போது அவர்கள் பேசியது ஊக்கம் அளிப்பதாக இருக்கவில்லை. வீட்டில் ஒரு அமங்கலமான சூழல் ஏற்படும்போது நம்முடைய பங்களிப்பு அங்கே இருக்காது என்று கூறியது எங்கள் மனதில் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியது. மற்றும் நேர்காணலின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் கோணலாகவே அமைந்தது. முதற் கோணல் முற்றிலும் கோணலாக அமைந்துவிடக்கூடாது என்றெண்ணி கப்பல் வேலை வேலைக்காகாது என்று முடிவெடுத்துவிட்டோம்.

இருந்தாலும் விதி வலிது என்ற கூற்றிற்கு ஏற்றார்போல, கப்பலில் இல்லையென்றாலும் கடலில் வேலை என்றாகிவிட்டது. ஒரு ஆறுதல் என்னவென்றால் பார்ஜ் ஒரு இடத்தில் அல்லது ஒரு நாட்டில் வேலை முடிந்து அடுத்த இடத்திற்கோ அல்லது நாட்டிற்கோ செல்லும்போது மட்டுமே இப்படி ஒரு நெடும் பயணம் மேற்க்கொள்ள நேரும். அப்போதும் கூட உதவிப்படகுகள் புடைசூழ ஒரு மாப்பிள்ளை தோரணையுடனே மிதந்து செல்லும். அவசரகால தேவைக்கு ஹெலிகாப்டர் உதவியும் உண்டு. மற்றபடி பொதுவான ஆழ் கடல் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபடும்போது கடலில் நங்கூரம் (anchoring) பாய்ச்சப்படுவதால் இது போன்ற ஆட்டத்திற்கு வழி இல்லாமல் போய்விடும்.

சுமார் 36 மணி நேர கடல் வழி பயணத்திற்கு பிறகு காபோன் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியை வந்தடைந்தோம். கடலின் தட்ப வெட்ப சூழ்நிலையை அறிந்து அதனுடைய சாதக பாதகங்களையும் ஆராய்ந்த பிறகே எங்களது பணியைத்தொடருவோம். அது வரை வெட்டியாய் பொழுதை கழிப்பதை பற்றி ஆராய்வது, திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் அனிவகுப்பை கண்டு கழிப்பது, படம் பிடிப்பது போன்றவை மட்டுமே பொழுதுபோக்கு.


ஜம்ஷீது,
காபோன்,
28/10/2008.

No comments:

Post a Comment