Thursday, February 26, 2009

பாழே மடக்கொடி இல்லா மனை

Before, you said
you dont - love me
but now - I wonder
you love me why?

எபி ஒரு திறமையான வெல்டெர். பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்த அவன் பத்தாண்டுகளாக எங்களது நிறுவனத்தில் பணியாற்றுகிறான். நான் இந்த பார்ஜில் பணிக்கு வந்து ஒரு மாதத்திற்க்கு மேல் ஆனாலும், கடந்த இரு வாரங்களாக மட்டுமே வெல்டிங் தொடர்பான வேலைகள் நடந்து வருகிறது. நான் வெல்டிங் கிளையில் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளராக பணியாற்றுகின்ற காரணத்தால் வெல்டர்களுடன் நட்புறவு கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த இரு வாரங்களில் எபியின் சுற்று நான்கு முறை வந்தது. இந்த நான்கு முறையிலும் நானே அவனுடைய வெல்டிங்கை கண்காணிக்கும்படியான சூழல் அமைந்து விட்டது. அவன் ஒரு திறமையான வெல்டர் மட்டுமல்ல சுறுசுறுப்பு மிக்கவனும் கூட. எந்த ஒரு இந்தியரை பார்த்தாலும் "கியா ஹால் ஹே பாய்?" என்று கேட்பது அவனுடைய வழக்கம். ஒரே ஆளை, ஒரே நாளில் நூறு முறை பார்த்தாலும், நூறு முறையும் இதை கேட்பான். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கும் அவன், எந்த நேரமும் பாடிக்கொண்டே இருப்பான். வெல்டிங் நடைபெறும்போது வெல்டர்கள் மற்றும் வெல்டிங் செயர்ப்பாடுகளை அருகிலிருந்து கண்காணிக்க நேரும். அவ்வாறு நான் கண்காணிக்கும்போது அவன் ஒரே ஆங்கில பாடலை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தது எனது கவனத்தை ஈர்த்தது. அதிலும் அந்த பாடலின் மேலே குறிப்பிட்ட நான்கு வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக உதிர்க்கப்பட்ட வார்த்தைகளாக எனக்கு தோன்றியது. இந்த பாடல் அவனுடைய திருமண வாழ்க்கையில் அவனுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தின் பிரதிபலிப்பு என்பதை பின்பு அவனிடமிருந்து நான் தெரிந்துகொண்டேன்.

எல்லோரையும் போல அவனும் மிகவும் அன்யூன்யமான ஓரு மன வாழ்க்கையையே விரும்பியிருக்கின்றான். விரும்பியவாரே மன வாழ்க்கையும் அமைந்திருப்பதாகவே நம்பியிருக்கின்றான். உறவினர்களுக்கு பொருளுதவிகள் செய்வது, அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பணம் கொடுத்து உதவுவது, அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத்தர உதவுவது என பல உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவன். தன் உறவினர், தனது மனைவியின் உறவினர் என்ற பாகுபாடு இல்லாமலே உதவிகளை செய்திருக்கிறான். இருந்தாலும் இந்த விஷயத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறிது உரசல்கள் இருந்திருக்கிறது. வெறும் பள்ளிப்படிப்பே முடித்திருந்த தன் மனைவியை கல்லூரி இளநிலை முடிக்க உதவியிருக்கிறான். ஒரு அழகான பெண் குழந்தை உள்ள நிலையில் தனக்கு எபியை பிடிக்கவில்லை என்றும், இனிமேலும் தனக்கு அவன் மீது எந்த ஈர்ப்போ காதலோ இருக்கப்போவதில்லை என்று கூறி விவாகரத்து பெற்றுக்கொண்டதை இன்றளவும் அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

இப்போது அவள் ஒரு நல்ல வேலையில் இருக்கிறாள், இருந்தாலும் தன் மகளுக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான். இப்போதும் வாரத்திற்கு இரு முறையாவது அவளிடம் தொலைபேசியில் பேசுகிறான், தன் மகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில். இப்போதெல்லாம் அவளை அழைத்து பேசும்போது, அவள் இவனிடம் நீண்ட நேரம் பேச முயற்ச்சிப்பதாகவும், பேச்சினூடாக அவள் இவனது பிரிவை அதீதமாக உணர்வதாகவும், தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக அவள் பேசுவதும் மிகவும் வியப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது. ஆனால் இவனுக்கு உறவை புதுப்பித்துக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு முயற்சிக்க வேண்டாம் என்பதை அவளிடம் தெளிவாக கூறியிருக்கிறான்.

எபி தன் தாய் நாட்டிற்கு சென்றாலும் கூட, இவனது நடவடிக்கைகளை தன் உறவினர் யாருக்கும் தெரியப்படுத்துவது இல்லை. யாரையாவது சந்திக்க வேண்டுமென்றாலும் கூட, அவர்களை ஒரு பொது இடத்திற்கு வரவழைத்துப்பேசிவிட்டு அனுப்பிவிடுவது வழக்கமாம். இப்போது அவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும், இது அவனுடைய உறவினர்களுக்கு தெரியும் பட்சத்தில், இவனுடைய வாழ்க்கை இவ்வாறு அமைந்துவிட்டதை எண்ணி அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் அதை அவன் விரும்பவில்லை என்றும் கூறுகிறான்.

பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நினைவிற்க்கு வருகிறது

நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இது தானோ? – எதிர்
பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ?

பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது?

ஜம்ஷீது,
பாயிண்ட் நுவா,
காங்கோ,
9/11/08.

No comments:

Post a Comment